காதல் கவிதைகள்

ஆச்சரியம்

 

உன்னைப்பார்த்த நொடியில்
தொலைந்த என்னை
இன்னும் நான் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன் !

என்ன ஒரு ஆச்சரியம்
உன்னுடன் சேர்ந்தே
என்னை தேடுகிறேன் !

ஹைக்கூ - ஆடையில் தொலைந்தேன்

 

இது வரை தூக்கத்தை மட்டும்
களவாடிக்கொண்டிருந்தாய்!
இப்போது கனவுகளையும்
களவாடுகிறாய் !

சுடிதாரில் உன்னை பார்த்து
பழகிய நான்
சேலையில் உன்னை பார்த்தபோது !!

 

சொட்ட சொட்ட காதல்

 

பிளிறும் களிறும்
உன்னை கண்டு மிளிரும்!

துளிர்க்கும் மழைத்துளி
உன் மடி தவழும்!

காற்றுக்கும் கைகள் முளைத்து
உன்னை தீண்ட தொடரும் ..

உன் நிகக்கண் இடுக்கினுள்
என் நித்தமும் தொலையும்..

உன் புருவ அசைவுகளில்
சிறு பூவும் பூப்பெய்தும்!

உன் சைவ கண்களில்
அசைவ பார்வை அலைமோதும்!!

உன் மெல்லிய இடை நூலகத்தில்
நான் எதுகையும் மோனையுமாய்...

சிலையழகால் சிறையாக்கினாய் !
சில நிமிடம் மரமாக்கினாய் !

உன் சிரிப்பினால் சித்தம் கலங்கும்
என் சிந்தையின் மொத்தம் மயங்கும்!

முத்து பவளம் மாணிக்கம்
இவையாவும் உன்னிடம் யாசிக்கும்!

சில நொடி தோன்றும் வானவில்லும்
உன் கண்களால் காணவே தவமிருக்கும் !!

மெண்மை
உந்தன் மேனி சொல்லும்
அதன் மேன்மை

வெண்மை
உந்தன் நிறம் சொல்லும்
உண்மை

பெண்மை
நீயே அதற்கு
பெருமை

சந்தங்கள் எல்லாம் உன்னை பாட
சண்டைகள் போடுது ஏனோ?

உன் உதடுவழி வார்த்தைகள்
கேளாத காதிலும் தேனாக பாய்ந்திடும் !

உன்னால்
கூண்டுக்கிளியும் குயிலாகும்
சிறு பட்டமும் வானூர்தியாகும்!!

பொம்மைகள் கொண்டு நீ விளையாடி
பொம்மலாட்டமும் ஆடுகிறாய் ...

திருவிழாக்களில் நீயே தேராகிறாய்..
உன்னை இழுக்கும் பக்தர்களில் நானும் ஒருவனாகிறேன்..!

குளத்தில் தாமரையே !
என் மனத்தின் தாரகையே !!

கயிறு கட்டி நீ தூலியாடா
ராட்டினமாய் உனையே சுற்றுவேன்!

உனக்கு நான் சோறுவூட்டி
நிலாச்சோறு நான் அறிவேன்!

உன் நெத்திப்போட்டுல நான் விழுந்து
என் நெஞ்சாங்கூட்டுல மீண்டுழுந்தேன்!!

நீ பூக்களின் அருகினில் போனாலே
தேனீக்கள் மொய்த்திடும் தன்னாலே...

தெருவில் நீ நடந்து சென்றால்
சாலையோரப்பூக்களும் சாய்ந்து உனையே பார்க்குமே..
உன் பாதம் பட்ட இடமெல்லாம் புதுப்பூவும் பூக்குமே..

தொலைதூரத்தில் உன் முகம்
ஆகாயத்தின் ஒற்றை நிலவு !

உன் விழி பட்டாலே
அஃறிணையும் உயர்திணையாகும் !

உன் குரல் கேட்டாலே
பூனையும் வீணை வாசிக்கும்!
புலியும் புல்லாங்குழலூதும் !

என் கற்பனையின் தேவாரமே
என் விற்பனையின் கூடாரமே!

இதழ் முத்த கோபம் கொள்!
மார்போடு மன்னித்தருள்!!

உன்னுடல் வியர்வை தான்
என் உயிர் செடிக்கு சொட்டு நீர் பாசனம் ..

உன் காதுக்குள் காதல் சொல்ல
காலமெல்லாம் காத்திருப்பேன்...

"தீண்டாமை" வேண்டாமடி

உன் கைகள் தாராயோ!!!

என்னுள்ளவள்

 

கடை விழிப் பார்வையில்
கவிதை சொன்னால் ..
கண்களை சிமிட்டி
கர்வம் தொலைத்த்தால்..

புன்னகைப் பூவால்
புது மலர் மலர..
தேனிசை குரலில்
செந்தமிழ் திளைக்க..
பேசிய வார்த்தையில்
வான்வெளி துளிர்த்தது...

மெல்லிய இடையின் இலக்கணமே
உன் அழகினில் தொலைந்தேன் இக்கணமே..

உன் பாதச்சுவடுகள் வழியாக
புது பாதையும் தொடருது துணையாக...
உந்தன் பின்னே வந்தாலே
எந்தன் ஜென்மம் முடியாதே...

கைகளை கட்டி கடலினுள் தள்ளியும்
வானத்தை தொடுகிறான் உன்னாலே..

உன்னை அடையும் ஆண்மகனும்
கர்ப்பம் தரித்துத் தாயாவான்..

உந்தன் அருகில் இருந்தாலே
எதுவும் சாத்தியம் தன்னாலே..

 

மணப்பந்தல்

 

கொஞ்சம் கூச்ச சுபாவம் தான் எனக்கும்...
இன்றோ அது எல்லை மீறி
என்னுள்ளே என்னவென்றறியா
எல்லைகளுக்குள் எட்டிப்பார்க்கிறது!

காதல் திருமணம் தான்..
பலமுறை பார்த்து..
பலவற்றை பேசி..
பல நினைவுகளில் நினைந்து..
பல பொழுதுகள் கழித்து..
காதல் மொழி பல பேசி
கை கோர்த்த தருணங்களும்
ஏராளம்!
தாராளம்!

இன்று ஏனோ?!
உன் கண்களை காண
கார்கில் போரே நடக்கிறது ...
உன்னருகில் நிற்க
அம்மணம் துறந்ததாய் ஓர் உணர்வு ..

பல நாட்களின் ஏக்கம்..
பல நாள் கனவுகளின் கருப்பொருள் ..
பல கவிதைகளின் கற்பனை..
எத்தனை முறை ஒத்திகை
அத்தனையும் இன்று கண்முன்னே ..!

குறித்த நேரத்தில் நீ வரவில்லை என்று
கோபப்பட்ட தருணங்கள் காணாமல் போய்
என்னருகிலே நின்றிருக்கிறாய்
நான் தன் என்ன செய்வதன்றியாமல் முழிக்கிறேன் ?

பக்கத்து வீட்டு அண்ணா பார்த்துவிடுவாரோ..
எதிர் வீட்டு அக்காள் யாரிடமாவது சொல்லிவிடுவாளோ..
எப்படியாவது அண்ணாச்சி கண்ணுல மட்டும் படமா
தப்பிச்சிட மாட்டோமா என்றும் ...
இன்னும் ஒரு தெருவு மட்டும் தாண்டுனா போதுமே
ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் ..
இப்படி
பலரது கண்களில் கருப்பு கண்ணாடி மாட்டி விட்டு
நாம் மட்டும் மாட்டிக்கொள்ளாமலே தொலைந்தோம்..

ஆனால் இன்று
பக்கத்து வீட்டு அண்ணா,
எதிர் வீட்டு அக்கா,
நம்ம அண்ணாச்சி ...
எல்லோருமே வசதியாக நாற்காலியில் உட்கார்ந்து
நம்மை தானே இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்...
என்ன வேடிக்கை
நாமும் அதை அசட்டு சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் ..

உன் தோழிகள்
என் தோழர்கள்
நம் நட்பு வட்டாரங்கள் தான்
நமக்கு முன்னே வட்டமேசை மாநாடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் ..
நிச்சயம் அவர்கள் நம்மைப்பற்றி தான் அசை போட்டுக்கொண்டிருப்பார்கள் ...
நமக்கு தெரியாத என்ன?
எத்தனை மாநாடுகளுக்கு தலைமை தாங்கியிருப்போம்..!

சூரியன் உதிப்பதும்
மலர்கள் மலர்வதும்
எல்லாம் தினம் தினம் நடப்பதுவே
எனக்கு மட்டும் ஏனோ
எல்லாம் புதிதாக தெரிகிறது..

சூறாவளியாய் சுழன்றடித்த சூறைக்காற்றும்
புல்லாங்குழல் நுழைந்து
புது கீதம் பாடுகிறது..

நடப்பவை எல்லாம் நடைமுறைதான் என்றாலும்
எனக்கு மட்டும் புதுமுறையாய்
வள்ளுவன் தந்த பொதுமறையாய்...

மணப்பந்தலில் இணைந்திருப்பது
நமக்கு மட்டுமா சந்தோசம் ,
நிச்சயம் இல்லை ..
அதோ
நான்காவது வரிசையில்
மூன்றாவதாக அமர்ந்திருக்கும்
நம் நண்பனின் கண்களைப்பார் ..
தன் காதலும் மேடை ஏறும் என்ற
அவன் நம்பிக்கையும் தான்
நம் மணமேடையின் மகிமை ..
நம் மண வாழ்வின் பெருமை ..

சிகப்பு கம்பளத்தில் நாம் நடந்து வர
பந்தலில் கட்டி இருக்கும் வாழை மரமும் கொஞ்சம் எட்டித்தான் பார்க்கிறது..
மேடையின் நாற்காலி,
உனை இராணியாகவும்
எனை இராசாவாகவும் நினைத்து ..
ராஜ மரியாதையை கொள்கிறது ..

மேடையில் அலங்கரிக்கும் பூக்களில்
நம் காதலில் பூத்த அந்த ஒற்றை ரோஜா நிச்சயம் இருக்கும் ..

எல்லா புகைப்படங்களிலும்
நம் புன்னகை மட்டுமே பதிந்திருக்க ...

என்னவென்று நான் சொல்வேன்
நம் மணப்பந்தல் மல்லிகையை..!

கலையானவளே

 

உன் இதழில் சுவையாக
தேனீக்களும் தீக்குளிக்குதே !

நீ பழரசம் பருகியதே
என்னுள் பரவசமூட்ட...
நீ பல ரசம் செய்து
ஏன் சில்மிஷம் செய்கிறாய் ?!

பட்டுடுத்தி நீ வந்தபோது
கொட்டடித்து என் மனம் குதிக்க ...
கண்ணாடியும் கொஞ்சம் வெட்கப்பட்டு
உன் பின்னாடி ஒளிந்து கொண்டது !!

 

சந்தன மழை

 

நீ இட்டிட்ட சந்தனத்தில்
வான் கொட்டிட்ட மழைத்துளி
சட்டென்று பட்டுத்தெரித்து
அது உன் இதழில்
பச்சென்று பற்றிக்கொண்டது ..
என் மனமோ கோடிட்ட இடங்களிலெல்லாம்
புது கோலமிட்டதை குதூகளித்தது!

 

பிரிவு

 

கிழிக்கப்படாமல் நாட்காட்டியும்
நேரமறியாமல் கடிகாரமும்
திசை தொலைத்த திசை காட்டியும்
உன் பிரிவினில் வாடும் எனக்கு
என்னுடன் சேர்ந்து ஆறுதல் தேடுகிறது !

 

ஹைக்கூ - காந்த ஈர்ப்பு விசை

 

முனைவர் பட்டம் பெற்ற
என் இயற்பியல் பேராசிரியர்
சொன்னபோது புரியாத
"காந்த ஈர்ப்பு விசை "

உன் இரு விழிகளை கண்டதும்
சட்டென்று விளங்கியது !

 

மாலை மயக்கம்

 

இனிய மாலை பொழுது...
செக்கச்சிவந்த வானம் ..
மோகம் சுமந்த மேகம்..
கல்லையும் கரைக்கும் கடலலை..
மனம் மயக்கும் கடற்கரை மண்..

ஊதக்காற்றில் உள்ளம் உருக..
இருவரொருவராய் அமர்ந்து...
என் தோலில் உன் முகம் பதிந்திருக்க..
காதோரம் காதல் மொழி பேசியே ..
கைகள் கோர்த்து பிண்ணிய வலையில்
விழாதோ "விண்மீனும் "...!!

நேரம் நம்மை நிர்பந்திக்க...
இருளும் சூழ்ந்து கை கோர்க்க..
பிரிய மனமில்லாமல் நாம் பிரிய ......

உன் காதலும்
என் காதலும்
தனிமையில் நம் காதலை தேடியவாறே......!

 

விழி அறை

 

ஒரு கண்ணில்
காதல் துளிர்த்து ..
மறு கண்ணில்
காமம் தெளித்து ..
இமை எனும் குடை அமைத்து ..
புருவ எல்லை கோடிட்டு ..
கருவிழி இரண்டே கருவறையும் ஆனதே ..
அதில் உன் உருவமே
விழிப் பொருளும் ஆகுதே !!

காமம்

 

காமம்
நீ இன்றி
நானும் இல்லை ...நாமும் இல்லை ...
கடவுளின் காமமே
இப்பூமியின் ஜனனம்!

காமம்
உணர்வுப் பசிக்கும்..
உடல் பசிக்கும்..
நீயே விருந்து..
நீயே மருந்து.!!.

காமம்
அலாதி அன்பின் வெளிப்பாடே மோகம்..
மோகத்தின் அலாவிய வெளிப்பாடே காமம்.. !

காமம்
காதல் போல் புனித உணர்வுதான் காமம்
காதலில் தொலையுங்கள்...
காமத்தில் தேடுங்கள்..
ஒருவரை ஒருவர் மட்டும்!!

சூது வாது
சூட்சமம் அறிந்து
சூரிய அஸ்தமனத்தின் பின் வெளிப்படுவதே காமம் ...
நீண்ட இருளே அதற்கு தோழி..!
கண்களின் வழி சம்மதம் பெற்று
கட்டிலின் வழி சமரசம் செய்யும் ...!!

இக்காலத்தில்

குட்டிக் கருவும் கருச்சிதைவடைகிறது ...?

அறுவடை நாள் முன்னரே
கருகும் பயிர்களாகிறது?
அர்த்தம் புரியா வயதில்
கர்ப்பம் தரிக்கிறது?
உரம் ஏதும் போட்டாலும்
மீண்டும் உயிர் பெறாது ..?!

நவ நாகரிக உடைகள்
கொஞ்சம் காமத்தின் கதவை திறப்பதாகத் தான் இருக்கிறது..

மேலை நாட்டு மோகம்
இந்த விஷயத்திலும் கொஞ்சம்
விபரீத விளையாட்டு விளையாடுகிறது ..!

காரணம் சொல்லி நழுவ
புத்தகம் திருடப்படவில்லை ..
சிறு காகிதம் கசக்கப்பட்டிருக்கிறது ..?

நிச்சயம் இந்த விஷயத்தில்
பகுத்தறிவு கொஞ்சம் பகல் கனவாய் இருக்கிறது ..
பட்டறிவு பயனற்றுப் போகிறது ...?

அனைவரையும் அரவணைப்போம்
அன்பு காமம் வேறுபாட்டோடு ..!!

 

என்னுலகம்

 

உன் மூச்சுக் காற்று
என்னுள் மோகம் தூண்டுதே!

மூலிகை வாசமதை
உன் தேகம் காட்டுதே!

உன் காலடிச் சுவடை சுற்றிலும்
சிறு சிறு கோடு வரைந்தேன் ...
அக்கோடுகளையே இணைத்து எல்லையாக்கி
என்னுலகை அதிலே சுருக்கிக் கொண்டேன் ...!

காற்றிலும் மாசு நீக்கி
நீ சுவாசிக்க யாசிக்கிறேன் ...!

சிறு பார்வை துளிர்த்து...
என் ஆண்மையை தளிர்த்து..
என் வாழ்க்கையை ஒளிர்த்தாய்....!

தாகம் கொண்ட தேகத்தின்
மோகமது பாவமென்று
உன்னையே என்னுள்ளே தொலைத்தாய் ..!

நீ கொடுத்த மோட்சம்
என் வாழ்வின் விருட்சம் ...!

ஊனமுற்ற ஒரு பறவை
பல சிறகுகளால் பல தேசம் போகுதே ...!

பேருக்கு ஆர்வம் கொண்ட என்னை
பேரார்வம் கொண்டவனாய் யாக்கினாய் ..!

செம்புழுதிச் சேற்றில்
செம்பருத்தியாய் நீ...!

கலவரம் கொண்ட என் கனவில்
நகர்வலம் செல்ல வந்தவளே ...!

சிப்பிக்குள் முத்தாய் நானிருந்தேன்
என் சிந்தையின் சொத்தாய் நீ வந்தாய் ..!!.


Post a Comment (0)
Previous Post Next Post