வாழ்க்கை கவிதைகள்

அனுபவம்

 

வாழ்வது ஒரு முறைதான்
வாழ்க்கையே அனுபவம் தான் !

கோபங்கள் தாபங்கள் எதற்காக ?
வஞ்சமும் வன்மமும் எதற்காக ?

கூடி வாழ்வோம் நமக்காக
கும்பிட தெய்வங்கள் அதற்காக!

கண்ணீர் காயங்கள் எதற்காக
கண்முன்னே காலமே பதிலாக !

இயற்கையின் நியதியை ஏற்போமே
ஈசனின் ஆசையை காப்போமே!

நீ எனும் நான் எனும் பேதங்கள்
பதில் சொல்லும் அவனின் வேதங்கள்!

கல்லாய் மண்ணாய் பிறந்தாலும்
அதுவும் அவனின் படைப்பாகும்!

காட்டிலும் மேட்டிலும் திரிந்தாலும்
அதுவும் அவனின் நினைப்பாகும்!

கோபுர கலசத்தில் இருந்தாலும்
கோயிலின் வாசலில் கிடந்தாலும்!

கோமகன் அவனின் மதிப்படியே
எல்லாம் நடக்கும் விதிப்படியே !!

 

நம்பிக்கை

 

கடுந்துயரம் துரத்தினாலும்
நெடுந்தூரம் பயணப்பட்டு !

தரணியே உன் பின் புரணி பேசினாலும்
தனி ஒருவனாய்த் தகர்த்திடு!

முக்காலமும் உனக்கு பொற்காலமே
நம்பிக்கையுடன் நடை போடு

துரோகம் உன்னை தொடர்ந்தாலும்
புது யாகம் செய்து கடந்து வா!

குருதியே நின்று போனாலும்
உன் உறுதியால் மீண்டெழுந்து வா !

அவமானங்கள் அணி வகுத்தாலும்
பகுமானமாய் பாய்ந்து வா !

யாசிக்கும் நிலையே வந்தாலும்
யோசிக்காமல் முயன்று வா !

உறவுகள் உன்னை உதாசித்தாலும்
உத்வேகத்துடன் உந்தி வா!

காலமும் நேரமும் சூழ்ச்சி செய்தாலும்
காலடி பதிக்க சுழன்று வா!

காட்சிகள் யாவும் பிழையாய் போயினும்
சாட்சிகள் கொண்டு பிழைத்து வா!

உடன் வரும் நிழலும் பொய்த்தாலும்
உன் உள்ளத்து நிழலை கூட்டி வா!

தேடிய பாதைகள் தொலைந்தே போயினும்
தேவைகள் உணர்ந்து தேடி வா !

விண்ணின் மழைத்துளி
மண்ணிற்கே சொந்தம் ....
உந்தன் வியர்வைத்துளி
வெற்றியின் தீ பந்தம்!

மயக்கம் கொள்ளாதே,
தயக்கம் கொள்ளாதே ,
மாற்றுவழி கொள்..!

ஆதவன் மறைவதும்..
வெண்ணிலா தேய்வதும்..
இயற்கையின் நிதர்சனமே...!

மீண்டும் கதிர் வீசி
அதிகாலையில் ஆர்ப்பரிக்கும் ..!

உந்தன் முகம் பார்க்க
வெண்ணிலா ஒளி வீசும் ..
அதை நீ உணர் மனமே ..!

காலம் கனியும் வரை தென்றலாய் வீசிடு..
கணிந்தபின் புயலாய் புறப்படு !

கட்டெறும்பும் காட்டெருமையாகும் !!

உன்நேரம் வருவரை
அயராமல் உழைத்திடு!

சோம்பலை சாம்பலாக்கி
வெற்றித் திலகமிடு!!!

 

நெஞ்சே எழு

 

தீவிரவாதம் கொல்
தீவிர வாதம் கொள்!

கூண்டில் கிளியாய்..
தூண்டில் மீனாய்..
அடைபடாதே!
அகப்படாதே!

சில கை விட்டாலும்
சிற கை விறி!

சிலந்தி வலையில் சிக்காமல்
சிகரம் நோக்கி செல்!

சிறு தீப்பொறியும் காட்டெரிக்கும்!
தீப்பந்தம் நீ ...
சுடர் விட்டு நெஞ்சே எழு!

 

ஒரு மரத்தின் வேதனை

 

வேரிலிருந்து துளிர்த்தேன்
விருட்சமாய் வளர்ந்தேன்
பாசம் கொண்டு நீ பாசனநீர் ஊற்றாவிட்டாலும்
எச்சத்தின் மிச்சத்தில் துச்சமாய் வளர்ந்தேன்...

நிழல் கொடுத்தேன்
காற்று கொடுத்தேன்
கனி கொடுத்தேன் ..
நீ மட்டும் ஏன் பிணி கொடுத்தாய் ?

இயற்கையின் சீற்றத்தில் சீர்குலையாமலும்
சர்க்காரு திட்டமிடலில் தொலையாமலும்
உசுர கையில புடிச்சு உசிரு வாழ்ந்து வந்த ..

பாவி மவ

காரு நிறுத்த இடமில்லன்னு
மாரு மேல கால வச்சு
கூறு கூறா போட்டுட்டேயே..

இது ஞாயமா?

 

துப்புரவாளி

 

இவன்
புறத்தில் அழுக்கன் ...
அகத்தில் அளப்பறியா அழகன்...

இவன்
நோய் தொற்று என்று
தன் பணிக்கு விரதமிருந்ததில்லை ..

இவன்
நாற்றத்தையே சுவாசமாய் ஏற்பவன் ...
குப்பைகளே கூடாரமாய் .கொண்டவன்...
எச்சத்தையே சுற்றி வாழ்பவன்...
மிச்சத்தை உண்டு மறைபவன்...

இவன்
நம் எச்சத்தின் மிச்சத்தை
நம் இச்சையின் பிச்சையை
மனமுவந்து மருந்து தெளித்து
நறுமணம் நல்க செய்பவன்..!

மூக்கை மூடி கடக்குறோம் நாங்க
முங்கி அதுலே கிடக்குற நீங்க...

துப்புக் கெட்டு துப்புறது நாங்க
கைய விட்டு கிட்டு அள்ளுறது நீங்க...

கழிவறைனு சொல்லவே கூச்சம்...
சாக்கடை சொல்ல சங்கோஜம்...
நம் மலத்தை நாமே வெறுக்க...
சம்மதத்துடன் சமத்துவம் காப்பவன் ..!!

படிப்பறிவு இல்லாமல்
இத்தொழில் செய்யாமல் ...
பகுத்தறிவு இருப்பதனால்
நற்தொழில் செய்கிறவன் ...!!

நீ துப்புரவாளி அல்ல
தேசத்தின் தூய உறவாளி ..!!!

 

நட்பு

 

" நட்பு "
என எழுதியதும்
என் நினைவுப் பூங்காவில்
பல கதைகளும் தோரணையிட்டது ..!

குட்டிச் சுவற்றில் கும்மாளம்...
வெட்டிப் பேச்சுகள் ஏராளம்...
பாசப் பிணைப்போ தாராளம்!!

சொல்லியும் மாளா நினைவுகளுக்கு
சொற்களை தேடியே நானும் ...?

கூட்டாஞ் சோறு பல ஆக்கி
கூடிய கூட்டங்கள் எவ்வளவு ..?

நீயாய் நானாய் இருந்தோமே..
நட்பினால் நாமாய் திரிந்தோமே!

சாதி மத சாக்கடை அகற்றி
சமத்துவ பூக்கடை வைத்தோமே...

அறியா வயதில் ஆயிரம் அனுபவம்
அறிஞனும் ஆனேன் நட்பாலே...

நித்தமும் நினைவுகள் நித்திரை கொல்லுது
இனி எஞ்சிய நினைவிலும் நீதானே...

சூழ்நிலைகள் பல சூழ்ந்த போதும்
சுயநலமில்லா சுயரூபமே!

முகமூடி யணியா முதல் உறவே
மரணமும் ஜனனமாய் உன்னாலே ...

வறுமையில் துணைநின்று...
தோல்வியில் தோள்கொடுத்து ..
நம்பிக்கையினால் நகர்த்திச் சென்றாய்...!

பட்ட காயங்கள் பலவாகும்
நீ இட்ட மருந்துகளே பலமாகும்..!

வழி தவறி நடக்கையில் தடுப்பானாய்...
மொழி பிறளுகையில் பெயர்ப்பானாய்...

துணிச்சல் கொண்டு நான் நடக்க
துணையாய் உந்தன் உயிர் கொடுத்(தாய்)..!!

காதல்
திருமணம்
குழந்தை
என காலத்தின் கணக்குகள் நகர்ந்தாலும்
நட்பு என்னும் ஓருறவில் நடப்புக்கணக்காய் தொடர்வோமே ...!!!!!!!!!

 

மதுபானம்

 

நீ நாகரிகத்தின் நவீனமாம்..
சந்தோஷத்தில் சம்பந்தியாம் ..
துக்கத்தில் துணைவனாம் ..
ஏக்கத்தில் ஏற்புடையவனாம்...
வெற்றியில் வேண்டியவனாம்..
தோல்வியில் தோழனாம் ...
சூது சேர்கையில் கூடி வருபவனாம் ..
மாது வெறுக்கையில் தேடி வருபவனாம் ...
இப்படி
வழக்கங்களில் இல்லாப் பழக்கம் ..
இன்று பழக்க வழக்கங்களில் ஒன்றானதே!

மாது விலக்கியதால்
மது விலக்கை எதிர்க்கும் சிலர் ...
போதை மட்டும் தருவதில்லை
போதனையும் தருகிறாய் என்று சிலர் ...

துட்டு நிறைய இருந்தா..
சிரிச்சுகிட்டே வருவயாம்..
கொஞ்ச துட்டு கொறைஞ்சாலும்
சிறுத்தும் நீயே வருவயாம் ...

மாதர் சங்கம் கொடிபுடிச்சும்...
தாலிக் கொடிகள் அறுந்த போதும்..
தொப்புள் கொடிகள் பிரிந்த போதும் ..
உன் வெற்றிக் கொடிதான் வேரூன்றியிருக்கு ..

கவர்மெண்டு கஜானாவிற்கு
நீயே கருவூலம் ..
பல கன்னியர் வாழ்க்கை
உன்னாலே நிர்மூலம் ..?!!

 


Post a Comment (0)
Previous Post Next Post