நம்பிக்கை கவிதைகள்

 

ஆழ்மனதின் ஆளுமை


எல்லோர் கண்ணாடியும்
முகம் காட்டும் ...
உன் மனக்கண்ணாடியே
உனை காட்டும் ...

பாதரச திரவியம்
பசையிழந்து போனால்
முகம் கொஞ்சம் கோணும்...
பல எண்ணம்
குழம்பி வலிந்தால்
மனம் குப்பை மேடாய் தோணும் ...

வெளியுலக வேதாந்தம்
என்றுமே தீராதது...
உன் உள்ளுலக சித்தாந்தம்
என்றுமே புரியாதது ...

கோமாளி கூட்டத்தில்
மேடையேறி என்ன பயன் ...
போராளி குணம் கொண்டு
தூர்வாரி உன்னை எடு ...

வெளிப்புற யுக்தி களைந்து...
உட்புற சக்தி தொடங்கு...
அதுவே ஆற்றலின் கிடங்கு ...

மனதுள்
புது விதி எழுது...
ஆற்றலை ஒன்று திரட்டு ...
சக்திகளை சக்கரம் செய் ...
புது தெம்பு உண்டாக்கு ....

மனமே
நீயென உணர் ...
மறுகணமே
தீயென திமிர் ...!


தன்முனைப்பு


எண்ணச் சிதறலை தொலைத்து...
சிந்தனைக் குவியலாய் திருத்து!

அணுக்களை அடுக்குகளாலாக்கி திரட்டு..
திசுக்களை தினம் தினம் சூடேற்று..
தசைகளை இறுக்கி புடைக்கச் செய்..
கொதிகலன் போல்
உன் இலட்சிய தீயை எரியவிடு!!

சாதனை மரமாக ..
சோதனையும் நிழலாகும் ..
நம்பிக்கையுடன் வீறு கொள்!!

பயிற்சி செய்து பயிரிட்டால்
அறுவடை பொய்க்காது!

உன்னதமாய் உழைத்தால்
வேலையிடம் சன்னதியாகும்!

காத்திருந்து காரியம் செய்தால்
காலமும் துணை வரும்!!

நாளை என்று தள்ளினால்
நாட்கள் மட்டுமே நகரும்...
இன்றே என்று துள்ளினால்
இமயமும் இயைந்து கொடுக்கும் !!

வெற்றியில் மயங்கிடாதே..
தோல்வியில் தொலைந்திடாதே...
வெற்றி தோல்வி ஏதுமில்லை
அனுபவமே என்றுணர்ந்தால்...!!

இக்கணமே துணிந்திடு
எத்திசையும் பணிந்திடும் ...!


நம்பிக்கை

கடுந்துயரம் துரத்தினாலும்
நெடுந்தூரம் பயணப்பட்டு !

தரணியே உன் பின் புரணி பேசினாலும்
தனி ஒருவனாய்த் தகர்த்திடு!

முக்காலமும் உனக்கு பொற்காலமே
நம்பிக்கையுடன் நடை போடு

துரோகம் உன்னை தொடர்ந்தாலும்
புது யாகம் செய்து கடந்து வா!

குருதியே நின்று போனாலும்
உன் உறுதியால் மீண்டெழுந்து வா !

அவமானங்கள் அணி வகுத்தாலும்
பகுமானமாய் பாய்ந்து வா !

யாசிக்கும் நிலையே வந்தாலும்
யோசிக்காமல் முயன்று வா !

உறவுகள் உன்னை உதாசித்தாலும்
உத்வேகத்துடன் உந்தி வா!

காலமும் நேரமும் சூழ்ச்சி செய்தாலும்
காலடி பதிக்க சுழன்று வா!

காட்சிகள் யாவும் பிழையாய் போயினும்
சாட்சிகள் கொண்டு பிழைத்து வா!

உடன் வரும் நிழலும் பொய்த்தாலும்
உன் உள்ளத்து நிழலை கூட்டி வா!

தேடிய பாதைகள் தொலைந்தே போயினும்
தேவைகள் உணர்ந்து தேடி வா !

விண்ணின் மழைத்துளி
மண்ணிற்கே சொந்தம் ....
உந்தன் வியர்வைத்துளி
வெற்றியின் தீ பந்தம்!

மயக்கம் கொள்ளாதே,
தயக்கம் கொள்ளாதே ,
மாற்றுவழி கொள்..!

ஆதவன் மறைவதும்..
வெண்ணிலா தேய்வதும்..
இயற்கையின் நிதர்சனமே...!

மீண்டும் கதிர் வீசி
அதிகாலையில் ஆர்ப்பரிக்கும் ..!

உந்தன் முகம் பார்க்க
வெண்ணிலா ஒளி வீசும் ..
அதை நீ உணர் மனமே ..!

காலம் கனியும் வரை தென்றலாய் வீசிடு..
கணிந்தபின் புயலாய் புறப்படு !

கட்டெறும்பும் காட்டெருமையாகும் !!

உன்நேரம் வருவரை
அயராமல் உழைத்திடு!

சோம்பலை சாம்பலாக்கி
வெற்றித் திலகமிடு!!!


மனமே மாற்றம் கொள்



பாழடைந்த குகையில்
சுற்றிலும் தூசு படிந்து
குப்பைகளின் கூடாரமாய்
குண்டும் குழி தடமாய்
சேறும் சகதியுமாய்
அருவருக்கும் அவலமாய்
ஒட்டடை ஓங்கி இருக்க
தன் நிலை
மரண நிலையை
மலர் தூவி வரவேற்றிருக்க ....

இக்குகையின் கூரை வழி
கொஞ்சம் பொத்தல் போட்டு
தேவ மகன் ஆசியினால்
மாய விதை ஒன்று
மங்கலமாய் வந்து விழுந்தது ....

அலங்கோலங்கள் புறந்தள்ளி
அற்புதமாய் மண்ணில் மயங்கியது ..
கொஞ்சம் துளிர் விட்டு
சிறுக சிறுக கிளையும் தொட்டது ...

பக்குவமாய் பக்கம் பக்கம்
பல துணை கிளைகள்
தோல் கொடுக்க
செம்மையாய் எழுந்து நின்றது ...

இன்றோ இம்மரக்கிளையில்
கூடு கட்டி
பல பறவைகள்
பரவசம் கொள்கிறது ...

மனமே மாற்றம் கொள்!
மாறும் எல்லாம்
பொறுமையோடு
புத்துயிர் கொள் .....!!


நெஞ்சே எழு



தீவிரவாதம் கொல்
தீவிர வாதம் கொள்!

கூண்டில் கிளியாய்..
தூண்டில் மீனாய்..
அடைபடாதே!
அகப்படாதே!

சில கை விட்டாலும்
சிற கை விறி!

சிலந்தி வலையில் சிக்காமல்
சிகரம் நோக்கி செல்!

சிறு தீப்பொறியும் காட்டெரிக்கும்!
தீப்பந்தம் நீ ...
சுடர் விட்டு நெஞ்சே எழு!


பயணத்தின் பாதை




லட்சத்தில் ஒருவனாய் இரா
லட்சியத்தின் உருவமாய் உலா ..

தோட்டத்து தொட்டி செடியாய் நின்றிடா
ஆகாயம் தொடும் ஆளுமையுடன் ஆர்ப்பரி..

வண்ணம் கண்டு மயங்கிடா
எண்ணம் கொண்டு எழுந்திடு...

கேளிக்கைகளில் தொலைந்திடா
கேள்விக்கணைகளை தொடுத்திடு ...

சந்தர்ப்பங்களை நிர்பந்திக்காது
சூழ்நிலைகளை சூதுகவ்வு ...

சாஸ்திரங்களை சமயப்படுத்தாது
சூத்திரங்களை சமைத்து பழகு ...

தடம் தேடி தொலையாது
தடயம் பதித்து தொடர்ந்திடு ...


பல தூரம் செல்
புது பயணம் செய்
நிஜக் காற்று வாங்கு
இயற்கையை துணை கொள்
தெரியாத தேசம் செல்
புரியாத பாடம் படி...

விதியின் மடியில் உறங்காது
மதியின் மேடையில் முழங்கு ..
எழுந்திடு
துணிந்திடு
போரிடு
வென்றிடு ..
மீண்டும் தயாராகு..

வாழ்கை செல்லும் வழி செல்லாமல்
உன் வழியில் வாழ்க்கையை செலுத்து ..


Post a Comment (0)
Previous Post Next Post