சமூக கவிதைகள்

 

பொருளாதாரப் போர்




















நகர்ந்திடும் நாட்கள் 
நாட்காட்டியின் கணக்குகளாய் மட்டும் ..
நல்லதொரு நாள்
என் நாட்காட்டியில் மட்டும்
அச்சிடப்படாமலே அச்சுப்பிழையாய் வெளிவந்ததோ?

அதிகாலை ஆதவன்
நேரம் தவறாமல்
நேர்மையின் சுடராய் சுட்டெரிக்க ...
என் வானில் மட்டும்
உன் ஆயுள்
கல்லறைக்கு செல்லும் கால் தடமாக...?

குளிர் நிலவின்
மோக ஒளியில்
யாவும் மயங்கிட ..

அதன் கருப்பு நிழல் மட்டும்
என் மொட்டை மாடியில்
தனித்தே தலையணை கேட்கிறதே ?

விரல்கள் கூட்டுச்சேர்ந்து
எனக்கு துணையாய்
கைகுலுக்குமென நினைக்கையில்
எதிரே சுட்டு விரல்
என்னை நோக்கி சூழ்ச்சிக்கிறதே ?

சந்தோச கோப்பையில்
நிரம்பி வழியும் ஒரு துளி கூட
என் வாசல் திசையறியாமல்
பொங்கி வரும் நுரையிலேயே
என் நுரையீரலும் நின்றிடுதே ?

மலர் பாதையில் நடந்தாலும்
என்றோ தொலைந்த
ஒற்றை முள்
என் பாதம் தேடி
இரத்தக் கோலமிடுதே ?

உண்மையின் வாய்கள் ஊமையாகுதே?
நேர்மையின் செவிகள் செவிடுமாகுதே?
நம்பிக்கையின் கைகளும் முடமாகுதே?
இரத்த ஓட்டத்தில் சாக்கடையும் கலக்குதே...
நித்தம் ஊடுருவி
இதயச்சுவற்றின் நாசி வழி சென்று
மாசு பண்ணி
துடிக்கும் துடிப்பை விஷமாக்குதே?

"
பொருள் " தான் ஆதாரமென்ற
நிலை மாறுமோ ?
இல்லை
என் "பொருளாதார நிலை "
மாறுமோ ?



கரையான் புற்றில் மனிதப் புழு





மனிதம்
மாண்டு போன மாயமோ?
தொலைந்து போன தூரமோ ?

மனிதம்
நடுநிசி நாயாய் நடுத்தெருவில்
கேட்பாரற்று கிடக்கும் கேவலமோ?

மலை
காடு
இதுகள் கூட
இன்னும் மனிதம் மறக்க வில்லை ...

மனிதன் தான்
மலை மறந்தான்
காடு மறந்தான்
மனிதமும் மறந்தான் ...

தன் மார்பை குடைந்த போதும்
தன் வயிறை கிழித்த போதும்
மலை மனிதம் மறக்க வில்லை
மாறாய்
மானுடம் வளம் பெறவேண்டி
தன்னையே தானம் செய்தது....

தன் இறக்கைகள் ஒடிக்க பட்ட போதும்
முழங்கால் வெட்டப்பட்ட போதும்
பிறப்புறுப்பில் கோடரி குத்தியபோதும்
கோபப்படாமல் தன்னையே கொடுத்தது காடு ....

இயற்கை அன்னையின் வயிற்றுப் பிள்ளைகள்
இன்னும் மனிதம் மாறா மரபணுக்களே....!

மனித இச்சையின் எச்சத்தின் மிச்சமோ
இந்த பிண்டங்கள் மட்டுமே மனிதம் மறந்தவை...

பூமித்தாயின் மடியில் தவழ்ந்து
பூத கண்ணாடி முன் நின்று
அறிவின் ஜீவிகள் அறிவியல் பேசுகிறது ..!

ஒத்த உயிர் துடித்திடும் போது
எந்த விலங்கும் ஓடியதில்லை..
உற்ற உறவு துடித்தால் கூட
விட்டு ஓடும் மனிதச் சாதி ....

மாற்று அன்னையின் மகளாயினும்
எந்த மா க்களும் மறந்ததில்லை..
குருதிச் சொந்தம் ஆன போதும்
குறுகிக் கிடக்கும் குப்பை மனம் ....

பெற்ற தாயை அநாதியாக்கும்
அணிஞாய அத்தியாயம் இங்கே தொடக்கம்...

கொஞ்சி வளர்த்த நெஞ்சு உசுர
கௌரவக் கொலைகள் கொன்னு குவிக்குது.. .
வரம் கொடுத்த சாமியும்
வழியில்லாமல் சபிக்குது...

பட்டப் படிப்பெல்லாம் பல்லிளிச்சு வந்து
சாதிக் கூடாரத்துல கொடியும் புடிக்குது....

காதல் காமம் களம் புரியாமல் ..
கலந்தே ரெண்டும் இருக்குது ...

கலியாணக் காட்சிகள் எல்லாம்
காகிதப் பூவானது ...

நட்பும் கொஞ்சம் நடைமாறி
வஞ்சம் மிஞ்சி மிருகமாகிறது ...

பிஞ்சு உசிரிடம் நஞ்சு விதைச்சு
கொஞ்ச மனிதத்தையும் கொத்தி போடுது...

கற்பு என்ற கண்ணியச்சொல்
அகராதியில் அன்னியச்சொல் லாயிற்று ..

உழைப்பு
உண்மை
உயர்வு
இவையெல்லாம்
கரும்பலகை கருத்தாய் மட்டுமே
கருத்திழந்து கருகிப் போனது ...

கூடா நட்பு
வேண்டா உறவு
இதுவெல்லாம் இன்பமானது ...

தேடுவதென்னவோ தாசியின் மடி
கூடுவதென்னவோ கோவிலின் வழி...

காசுக்கு மட்டும் கை தூக்கும் கூட்டம்
பணத்திற்கு மட்டும் பந்தியிடும் இடம்..

மூட்டை மூட்டையாய் மூடி வைத்து
முட்டாள் பலரும் முங்கிப் போகிறான்..

வந்த வேலை அறியுமுன்னே
வெந்த சோறு வடிக்கிறான்...

ஆதியும் புரியாம
அந்தமும் தெரியாம
அவசரமா கட்டுரா..
தன் சுடுகாட்டு கட்டிடத்த...


ஒரு தாசியின் நியாய கண்ணாடி




தாசி
கல்யாண சந்தையில் விலைபோகா மகள்
கட்டில் சந்தையில் விலைமகள்..

தாசி
தேவனும் வேஷமிட்டு
உன்னிடம் வந்ததாலோ
"
தேவதாசி " யானாயோ?..

தாசி
வயிற்றுப் பசி யார
உடல் பசி யாற்றுபவளோ?
பள்ளி செல்ல வழியின்றி
வழி தவறி பல்லி சென்றவளோ..?

குடிசையின் கெளரவம் காக்க
பல குடிசைக்குள் போனவளோ ?

குடும்ப விளக்கு சுடர் விட
பல அறை விளக்கை அணைத்தவளோ?

புருவ மையிட்டு
துருவம் தொலைத்தவளோ ?

உடற்சூடு தணியாமல்
மனச்சூடு கொண்ட
பல குடும்ப தலைவனின்
குலம் காத்த குலதெய்வமோ ?

எவ் வனுபவ மேனிக்கும்
நீ புதியவளே..!
எப் புதிய மேனிக்கும்
உன்னால் அனுபவமே..!

நீ தாளிட்டு கொண்டது
தங்கைக்கு தாலிக்கயிறு ஆனதோ ?

பிணி என்றாலும் துணிந்தாய்..
அரை மனதாய் அம்மணமானாய்..

நட்பு காதல் உனக்கும் உண்டோ ?
அவர்களும் உன்னை தாசியாய் பார்ப்பதுண்டோ ??

உன் முகவரி தேடி
பலர் முகவரி தொலைந்தது..

உன் முகவரியால்
பலர் முகமூடியும் கிழிந்தது!

உன்னை நாடும் ஆண்
ராமனென்றால்
நீயும் கண்ணகியே !!


திருநங்கையின் கடிதம்



எல்லோருமே சொல்கிறார்கள்

எங்களின் படைப்பு
இறைவன் செய்த சதியென்றும்
இதுவே உங்களின் விதியென்றும்!

முன்ஜென்ம பாவம் என்று சிலரும்
உன் பெற்றோரின் பாவக்கணக்கின் மிச்சம்
என்று பலரும்

என்ன தெரியும் உங்களுக்கு

ஆணென்ற ஆணவம் எங்களுக்கில்லை
பெண்ணென்ற அடக்குமுறையும் இருந்ததில்லை !

பாம்பிஞ்சிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததில்லை
பணத்திற்காக உறவுகளை கொன்றதில்லை
முகமூடி அணிந்து யாரிடமும் பழகுவதில்லை
சுய நலத்திற்காக யார் காலிலும் விழவில்லை
முன்னேற்றத்திற்காக யார் காலையும் வாரிவிடவும் இல்லை ...

ஆண்பால் பெண்பால் இல்லையெனினும்
பலர்பால் போற்றப்படுகிறவர்கள் நாங்கள்!


நடுநிலையில் பிறந்திருந்தாலும்
எல்லாவற்றிலும் நடுநிலையானவர்கள் !

அர்தநாரீஸ்வரனின் அர்த்தமுள்ள
அற்புத படைப்பு நாங்கள் !

"
அஜக்கு" என்றும்
அரவாணி என்றும்
ஒம்போது என்றும்
உங்கள் இஷ்டத்துக்கு எங்களுக்கு பெயர்வைக்கிறீர்கள் !!

இதுகூட பரவாயில்லை

கைகளை அசைத்தும்
கண்களை சிமிட்டியும்
சமிக்கைகள் செய்வது
எங்களுக்கே ஏற்பட்ட சாபக்கேடு?

அடிப்படை உரிமைகளை
மனிதாபிமான மாண்புகளை
உரிய மரியாதையை
கொடுக்க மறுக்கும் நீங்கள்
முதலில் மனிதர்களாகவே இருக்க முடியாது
எப்படி எங்களை விட மேலானவர்களாக
இருக்க முடியும் ?

நாங்கள் மட்டும் தான் பிச்சை எடுக்குறோமா ?
நாங்கள் மட்டும் தான் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறோமா ?
அப்படியே வைத்து கொண்டாலும்
எங்களை அந்த சூழ்நிலைக்கு தள்ளியவர்களே
நீங்கள் தானே?

படிக்க படிப்பு
இருக்க இடம்
பிழைப்புக்கு ஒரு வேலை
நீங்கள் கொடுத்து எங்களை ஆதரித்திருந்தால்
உங்களை விட மேலானவர்களாக
நிச்சயம் எங்களால் வாழ முடியும்!

எங்களை கேலி செய்வதை விட்டுவிட்டு
உங்களுக்குள் அர்த்தமுள்ள
கேள்விகளை கேட்டு பாருங்கள்!

உங்கள் வீட்டில் இப்படியொரு
உயிர் இருந்தால்
அவர்களையும் இப்படி தான் பாப்பீங்களா?

இறைவன் எங்களை படைத்து
உங்களுக்கு பாடம் சொல்கிறான் !
பாவம் தேடாதீர்கள்...

திருநங்கையாய் பிறத்தல் சாபம் இல்லை!

இறைவனின் படைப்பில்

கை கால் ஊனமுற்று பிறக்கும் உயிர்களைப்போல்
நாங்களும் சிறிய குறையுடன் பிறந்தவர்கள் தான் !

இனியாவது எங்களையும் நேசியுங்கள் ?!


கல்யாணமாம் கல்யாணம்



முன்பெல்லாம்
திருமணம் ஒரு திருவிழா ..
இன்றோ
பல திருமணங்கள் தெருவிலா?

நம் மரபின் மரபணுக்களில்
மறக்கமுடியா சடங்கு ...
இன்று
நாம் மறதியில் கடந்து செல்லும்
சங்கூதப்பட்ட சம்பர்தாயம் ..

வாரம் விடுமுறை என்ற
வரம் வாங்கி தந்த விவாஹம் ..!
இன்று
வார இறுதியிலே விவாஹம்
என நடக்குது விவாதம் ...!!

மூத்தோர் முன்னின்று
முக்கடலாய் கூடி
முறைப்படி முஹூர்த்தம் ..

யாரென்று தெரியாமல்
காவலுக்கு ஆள் சேர்த்து
முகவரியறியா முகவர்கள்
புகைப்படத்தில் மட்டும் முகம் பதிந்தவர்கள்..

அழைப்பிதழ்கள் எல்லாம்
அழைக்கப்படாத விருந்தாளிகள் ..
சொந்தங்கள் எல்லாம்
பந்திக்கு மட்டுமே முந்துங்கள் ...

மலர் மாலைகளும்
காகிதப் பூ மாலையாய்
மடிந்து மறையுது ..

பந்தலில் கட்டிய
வாழை மரம்
எனக்கென்னானு பாக்குது ...

வட்டிக்கு வாங்கியவன் போல்
வந்தவனும் நூறு சேர்த்து
மொய் வச்சு மொத ஆளா கிளம்பிடுறான் ..

யாருனு தெரியாம
எதுக்குன்னு புரியாம
மேடையில சோடி
தொலைந்த ஜாடி ?

காலத்தின் கணக்குகளில்
கலையிழந்த சித்திரமாய் ...
இன்னும் எத்தனை
சடங்குகள் சடலமாகுமோ ???


மதுபானம்



நீ நாகரிகத்தின் நவீனமாம்..
சந்தோஷத்தில் சம்பந்தியாம் ..
துக்கத்தில் துணைவனாம் ..
ஏக்கத்தில் ஏற்புடையவனாம்...
வெற்றியில் வேண்டியவனாம்..
தோல்வியில் தோழனாம் ...
சூது சேர்கையில் கூடி வருபவனாம் ..
மாது வெறுக்கையில் தேடி வருபவனாம் ...
இப்படி
வழக்கங்களில் இல்லாப் பழக்கம் ..
இன்று பழக்க வழக்கங்களில் ஒன்றானதே!

மாது விலக்கியதால்
மது விலக்கை எதிர்க்கும் சிலர் ...
போதை மட்டும் தருவதில்லை
போதனையும் தருகிறாய் என்று சிலர் ...

துட்டு நிறைய இருந்தா..
சிரிச்சுகிட்டே வருவயாம்..
கொஞ்ச துட்டு கொறைஞ்சாலும்
சிறுத்தும் நீயே வருவயாம் ...

மாதர் சங்கம் கொடிபுடிச்சும்...
தாலிக் கொடிகள் அறுந்த போதும்..
தொப்புள் கொடிகள் பிரிந்த போதும் ..
உன் வெற்றிக் கொடிதான் வேரூன்றியிருக்கு ..

கவர்மெண்டு கஜானாவிற்கு
நீயே கருவூலம் ..
பல கன்னியர் வாழ்க்கை
உன்னாலே நிர்மூலம் ..?!!


வழிப்போக்கனின் போதனைகள்



மெய்ஞானம்
பொய்ஞானம்
என் ஞானம்
உன் ஞானம்
எல்லாமே
விஞ்ஞானம் தான் ...

கண் பார்க்கும் காட்சிகள்
கற்பனையின் சாட்சிகள்...

மரநிழல் மட்டுமே மெய்
உன் நிழலும் காட்சி பிழை தான்..

பூமிப் பந்து
தினம் தினம் சுழலுகையில்
வடக்கேது...
தெற்கேது..
நாற்றிசையும்
மாயையே...

எத்திசையும் இத்திசையே
இத்திசை எத்திசையோ ..??.

ஆழ்ந்து பார்த்தால்
எல்லாமே அற்புதம் தான் ...
வாழ்ந்து பார்த்தால்
வாழ்க்கையும் அவ்வண்ணம் தான்...

கூர்ந்து பார்த்தால்
வெண்மையில் கருமை தெரியும் ..
நேர்ந்து நொந்தால்
பெண்மையின் அருமை புரியும் ...

தேடிச் சென்ற
அன்பு ...
தெருவோடு தொலைந்திடும் ...

கூடி வந்த
சொந்தம்...
கூட்டத்திலே கவிழ்த்திடும் ...

சின்னப் படகில்
சிங்காரமாய் போகிறோம் ..
கடலின் ஆழம் புரியாமல்
கை நனைத்து மகிழ்கிறோம் ...

வழி தவறி வந்த
வழிப்போக்கன் நாம் ...
புதுப் பாதை போட
சித்தம் இல்லையெனினும் ..
நடை பாதை போட்ட
நம்மவர் வழி போவோம் ....

மொத்தத்தில்
வாழ்ந்து சாவோம் ..
செத்து வாழ வேண்டாம் ....... ??


துப்புரவாளி



இவன்
புறத்தில் அழுக்கன் ...
அகத்தில் அளப்பறியா அழகன்...

இவன்
நோய் தொற்று என்று
தன் பணிக்கு விரதமிருந்ததில்லை ..

இவன்
நாற்றத்தையே சுவாசமாய் ஏற்பவன் ...
குப்பைகளே கூடாரமாய் .கொண்டவன்...
எச்சத்தையே சுற்றி வாழ்பவன்...
மிச்சத்தை உண்டு மறைபவன்...

இவன்
நம் எச்சத்தின் மிச்சத்தை
நம் இச்சையின் பிச்சையை
மனமுவந்து மருந்து தெளித்து
நறுமணம் நல்க செய்பவன்..!

மூக்கை மூடி கடக்குறோம் நாங்க
முங்கி அதுலே கிடக்குற நீங்க...

துப்புக் கெட்டு துப்புறது நாங்க
கைய விட்டு கிட்டு அள்ளுறது நீங்க...

கழிவறைனு சொல்லவே கூச்சம்...
சாக்கடை சொல்ல சங்கோஜம்...
நம் மலத்தை நாமே வெறுக்க...
சம்மதத்துடன் சமத்துவம் காப்பவன் ..!!

படிப்பறிவு இல்லாமல்
இத்தொழில் செய்யாமல் ...
பகுத்தறிவு இருப்பதனால்
நற்தொழில் செய்கிறவன் ...!!

நீ துப்புரவாளி அல்ல
தேசத்தின் தூய உறவாளி ..!!!


விதவையின் விவாதம்



கலியாணக் கோலம் கலைந்தவளோ ..
கட்டிலின்பம் தொலைத்தவளோ ...
தொட்டில் கரு கலைந்தவளோ ..
தொப்புள் கொடி தொலைத்தவளோ ...

குங்கும கூடாரம் கைவசமிருந்தும்
துளி குங்குமம் தொடாதவளோ ...

தண்ணீர் தெறிக்க விட்டு
புது சீமாறு தொடைக்க விட்டு
மாட்டு சாணம் தெளித்து
மங்கலமாய் உடை உடுத்தி
வண்ணம் பல தேடி
மருதாணி நிறமெடுத்து
மங்கலமாய் போட்ட
ரங்கோலி கோலமொன்று
தண்ணீர் லாரி வந்து
பீச்சிட்டு அடிச்ச போது
கலைஞ்சிட்ட கோலமா?
என் கோளம்.......


வான் மழையில்
சிறு பில்லும் பிழைத்திருக்க
என்னிடம் மட்டுமோ
பொய்த்து போகிறதோ ?

பொதுவுடைமை நீல வானம்
என் கண்களில் மட்டும் மீளா வானமோ?

வீசிடும் காற்று
சிறு துவாரமும் நுழைந்திட
முன் நிற்கும் என்னை மட்டும்
தீண்டாமை செய்கிறதோ?

சிறந்த மெட்டமைத்து
சிங்கார பாட்டெழுதி
பூங்குயில் பாடிய
தேவ ராகம்
கேட்கும் முன்னே
குயிலின் குரல்வலை
கயிறு வந்து நெரித்ததோ ?

இனி நா என்ன செய்ய......

புதுமைப் பெண்ணாய்
புதுச் சிந்தனை செய்யவா ..

அப்படி யெனில்

இச் சமூகம்
மலர் கொடுத்து வரவேற்குமா?
இல்லை
மலர்வளையம் போட்டு தடுக்குமா ..?

பாவம் என்று தோள் கொடுக்குமா?
இல்லை தாசி என்று
நெஞ்சு கிழிக்குமா?


சிற்றுயிரும் துணை தேடும் ..
இச் சித்தாந்தம் புரிந்திடுமா?


மறு மணமா?
மறுக்கும் மனமா ?

சமூகமே நீயே சொல் ?

இங்கு வலியுடன் யாரும் கேட்பதில்லை..
வலியவரிடமே கேட்கிறார்கள் ..
நீங்களே சொல்லுங்கள் ......

விதவை என்று விலக்குவீர்களா..???.
கைம்பெண் என்று கரம் கொடுப்பீர்களா.. ???


வெளிநாட்டு வெள்ளச்சாமியின் குமுறல்



பிறதேசம் சென்றேனே..
பரதேசம் ஆனேனே..

பிறந்த ஊர் பிரிந்து
தொலைதூரம் தொலைந்தேனே..

நம் மண்ணை உதறித்தள்ளி
புழுதிக் காட்டில் புகையானேனே..

சொந்த பந்தம் துறந்து
சோகக் காடு சென்றேனே...

தொடர்வண்டி ஏறி ஊர் பிரிந்தேன்
தொடர்கதையாய் உயிரும் வலிக்குதே ...

நவ நாகரிக ஆடை அணிந்து
நயமா நானும் விமானம் ஏறினேன்...

வந்து நின்ற இடமும் தெரியல
வரவேற்க பூமாலை இங்கில்ல...

கொண்டு வந்த துணிப்பைய
தலையணை யாக்கி நான் படுத்தேன்
வெள்ளக்கார தொர ராசா
நமக்கு இங்க இன்னும் சுதந்தரம் குடுக்கல...

பாச தெரியாம
பேச தெரியாம
வயிற்று பசிக்கு மொழி தேடுன..

கண்ணு இருண்டு
கையும் நடுங்குது ..
கெளரவம் தொலைச்சு கையும் ஏந்துனேன் ..

அப்படி இப்படி பாதி வயிறு நிறைய
என்ன எப்படி னு யோசிச்ச நெறய...

தங்கச்சி கலியாணம் ரெண்டு மாசத்துல
அப்பாவோட ஆபரேசன் அடுத்த வாரத்துல
தாலி கழட்டி அனுப்பி வச்ச அம்மாகிட்ட
வட்டி கேட்டு வாசல் வருவா ரெண்டு நாளுல...

அனுப்பி வச்ச ஏஜெண்டு
இன்னும் தகவல் சொல்ல ..
கூட்டிப் போகும் ஏஜெண்டு
கூட்டத்துல காண ..

நீ நோம்பிருந்து பெத்த மக
நோயில தா துடிக்குறனே...

நா
ஏமாந்த கத சொல்ல என் நெஞ்சுல தெம்பில்லை
ஒன்ன ஏமாத்த தெரியாதே இப்போ நா என்ன பண்ண ?
அம்மா.........


2 Comments

  1. அனைத்து அருமையான வரிகள் நன்றி🙏💕

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post