களவு போன மகான்

 களவு போன மகான்



சத்தியமே உன் வழி
சாத்தியமா இவ்வழி!!?

காந்தியை யாரும் மறக்கவில்லை
காந்தியம் தான் மறந்து போனது ..

உன் மதிப்பு ரூபாய் நோட்டில் மட்டும் ....
அதுவும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் கொஞ்சம் கூடுதலாக ...

ரூபாய் நோட்டில் மட்டும் உனக்கு மதிப்பு
புத்தக ஏட்டில் மட்டும் உனக்கு சிறப்பு...

தெருவுக்கோர் சிலை உண்டு உனக்கு
காந்தியம் தெரியாத காவலர்கள் துணை அதற்கு...?

பூ மாலை
புகழாரம்
உன்னை போல் யாருக்கும் இங்கில்லை ..
ஆனால்
இதுவெல்லாம் வெளி வேஷம்..
உன் கொள்கை பலருக்கு விஷம் ...

அரசியல் அச்சாணியே
உன்னை கொண்டு தான் சுழலுகிறது..
எல்லா அலுவலகங்களிலும்
உன்னை மாட்டி வைத்து
உன் கொள்கைக்கு மாலை போட்டு விட்டார்கள்?!

அகிம்சை என்ற வார்த்தையே
இம்சை ஆனது..
உன் ஆயுதம் கொஞ்சம்
கூறும் குறைந்து போனது ..

அகிம்சை தடைபட்டது ..
அரக்கம் தலைமை தொட்டது ..

உனக்கே இந்த நிலை என்றால் ..?
உன்னுடன் போராடி
உயிர் விட்ட உன்னதர்களுக்கு
கொஞ்சமும் மதிப்பில்லை ..
சொல்லியும் பயனில்லை .
வரலாற்றிலும் அவர்களுக்கு இடமில்லை ...



உன் கூட்டு முயற்சியால்
பெற்று தந்த சுதந்திரம்
இன்று சுதந்திரமில்லாமல் தடுமாறுகிறது..
கொஞ்சம் தடம் மாறுகிறது ...?

பேச்சு சுதந்திரம்
பெயரளவில் ..?
பல நேரம்
பெரும் புள்ளிகளின்
கை விரலில் ..!!

எழுத்து சுதந்திரம்
ஏட்டளவில் ..?
இது எங்கே செல்லுமோ
நாளடைவில் ..!!

உன் வழி தொடர
விருப்பம் தான் ....
வழிகாட்டியாய் நீ
தான் இல்லை ....

உனை போல்
"
மகா" ஆத்மா இன்றில்லை ...
உனக்கு யாரும் ஈடில்லை ...

- வருண் மகிழன் -

3 Comments

Post a Comment
Previous Post Next Post